நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2

May be an image of text that says "நல்லூர் nda கோயில் வழக்கு பாகம்2 2 Lank 1928 ஆம் ஆண்டு டு JAFFNA DISTRICT COURT IXETN-PHOTO"

 நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று  முந்தி சொன்னீரா?  இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை
பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை
1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா?  ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை
நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி
ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்


தருமப்பொருட் பற்றிய பிரமாணம் வந்ததையிட்டு பயந்துதானா அவர்கள் அந்த உறுதியை முடித்தார்கள்? ஆம் அப்படித்தான் . கோயில் எங்கள் குடும்பத்திற்கு உரிய தருமபொருள்  , அந்த விவகாரங்கட்குள்  பிறர் பிரவேசிப்பது பிரயமில்லை.
 அதற்குப்பின்தான் நீர் நியாயவாதிகளோடு நீர் யோசித்து 1916 ஆம் ஆண்டு நீர் எழுதிய உறுதி போதிய பெலப்புடையதல்ல என்று அறிந்தீரா? இல்லை நான் அப்படி நினைக்கவில்லை
 பிறரை கோயிற் விவகாரங்களுக்குள் பிரவேசியாது தடுப்பதற்கு குறித்து உறுதி போதியதாகும் என்று நினைக்கின்றீரா? அப்படி என்றுதான் நினைக்கிறன்.
இந்த கோயிலுக்கு நீங்கள்தான் சொந்தக்காரர் என்று உறுதியிலே எடுத்துக்காட்டபடவில்லையே?  அவைகளை பற்றி எனக்கு தெரியாது
ஈற்றில் மிஸ்ட்ரர் ரொக்கின் (நீதிபதி) கேள்விகளும் அவற்றிக்கு விடையும்
ஊரவர்களால் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட பொருளை  நீரும் உம்மையுடைய முன்னோரும் கோயிகளுக்கு செலவிடுவதை பற்றி இதுவரையில் யாரவது உங்களுடன்  ஆட்சேபம் பண்ணி இருக்கிறாரகளா?   இல்லை குமாரசாமி கணக்கர் என்றொருவர்  மாத்திரம் எங்களுக்கு மாறாக ஒரு வழக்கு தொடுத்திருந்தார் . அவர் இந்த வழக்காளிகளில் ஒருவரான சுவாமிநாதருக்கு  உறவினர்
நான் அவைகளை படி கேட்கவில்லை .கோயிலுக்கு தாங்கள் தந்த பொருள்களை பற்றி உங்களோடு ஏதும் வழக்காடினார்களா? இல்லை
சிலகாலத்திற்கு முன்பு கணபதியார் பேரம்பலம் என்பவர் உமக்குமாறாக வழக்கு தொடர்ந்தாரென்று சற்று முன் இங்கு கேட்டர்களல்லவா? ஆம்
நீர் ஒரு மடத்தில் ஒரு பகுதியை இடிக்கவேண்டி இருந்ததல்லவா? ஆம்
மதத்தை இடித்தது எதற்காக? தீர்த்தக்குளம் தோண்டுவதற்காகவும் அதற்கு நான்கு பக்கமும் மண்டபங்கள் கட்டுவதற்காகவுமாம்
அது பெரிய குளமா? ஆம் மண்டபங்களும் மிக பெரியன.
சில சில காலங்களிலேயே திருவிழா குளத்தை சுற்றி வருவதா?  ஆம் தீர்தோற்சவத்திற்காகவே அந்த குளம் தோண்டப்பட்டது
குறித்த வழக்காளி  (கணபதியார் பேரம்பலம்) உங்கள் முன்னோரிடம் இருந்து  மடம் கட்டுவதற்காக நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தாரா?  ஆம் கந்தையா மாப்பாணரிடம் இருந்து குத்தகைக்கு வாங்கினார்
கோயிற் சொந்தக்காரன் பரிபாலிப்பவர் என்ற அதிகாரத்திற்தானே கந்தையா மாப்பாணர் குத்தகையை எழுதி கொடுத்தார்? ஆம்
அந்த வழக்கில் சுப்பீரிம் கோர்ட்டார் நீர் கோயிலின் நன்மையையிட்டுதான் செய்தீர் என்றும், ஆனால் கோட்டாரிடம் இருந்து அதை இடிப்பதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டியது உமது கடமையென்றும் தீர்ப்பு செய்திருக்கின்றாரல்லவா?  ஆம் அப்படித்தான் ஆனால் எழுதப்பட்டிருந்த குத்தகை உறுதியை பற்றி எனக்கு முந்தி தெரியாது
 நல்லூர் வழக்கு 3 ..  முந்தய வழக்கு பிரதி ஒன்றை பார்த்தபோது ஒரு பிரதியிற் சபையாருக்கு ஏதோ ஒரு அனுமதி பத்திரமொன்று கொடுக்கப்பட்டிருப்பதாக சொன்னீர்? ஆம்
அது என்ன அனுமதி பத்திரம்? முந்தைய வழக்கு பிரதியொன்றை நான் வாசித்து பார்த்தபொழுது சுப்பைய்யருக்கு ஒரு அனுமதி பத்திரம் கொடுத்திருப்பதாக அதிற்  கண்டேன்.
மிஸ்டர் ஹெய்லி :  அனுமதி எதற்கு? கோயில் கட்டுவதற்கா அல்லது கோயில் மானேஜராக இருப்பதற்கா?  எதெற்கென்பது சரியாக தெரியவில்லை .தகப்பனாருக்கு பிராமணருக்கும் இடையில் நடந்த வழக்கு பிரதியொன்றை படித்தபோது பிராமணர் தங்களுக்கு ஏதோ ஒரு உரிமை உண்டென்று சாதித்திருக்க கண்டேன்.
 நீதிபதி : அனுமதி எதற்கென்று சொல்ல முடியாதா?  பூசை பண்ணுவதற்கென்று நினைக்கின்றேன்
என்ன பூசை செய்வாராக நியமித்ததற்கா? அப்படித்தான் இருக்கக்கூடும்.
கோயில் கட்டுவதற்கு அனுமதியல்ல? இல்லை
மிஸ்ட்ரர் ஹெய்லி : கோயில் கட்டுவதற்கு சுப்பையருக்கு ஒரு அனுமதி பத்திரம் கொடுக்கப் படத்தையிட்டு நீர் ஏதும் அறிவீரா?  இந்த வழக்கிலே வழக்காளிகள் சொல்லத்தான் கேட்டிருக்கிறேன்
அதை நேரிற் கண்டீரா அல்லது பிறர் சொல்ல கேள்விப்பட்டீரா? இல்லை
தோணியின் செலவென்ன 60000 ரூபாய்தானா? 60000 ரூபாயும் தோணி செய்வித்த காசல்ல . இரண்டோரு முறையும் தோணி பிரயாண செலவும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
உண்மையாக தோணிக்கு முடிந்த பணமெவ்வளவு? அதை பற்றி எனக்கு தெரியாது தமையனார் செய்வித்தவர்
 கருங்கல் ஏற்றுவதற்காக அது செய்விக்க பட்டதென்று சொன்னீர் கருங்கல் எதற்கு? கோயில் கட்டுவித்தற்கு
அப்படியானால் கூலிக்கு ஒரு கப்பலை பிடித்து கருங்கல் ஏற்றுவதற்கு பதிலாக ஒரு கப்பலை ஏன் புதிதாக செய்விப்பான்? கருங்கல் ஏற்றினால் கப்பல் பழுதடைந்துவிடும் என்று எல்லோரும் மறுத்து விட்டார்கள்
இந்த தோணியில் எப்போதாவது கருங்கல் ஏற்றி வந்ததுண்டா? ஆம்
அவைகள் இப்போது எங்கே? குவித்து வைக்கப்பட்டிருக்கிறது
எந்த இடத்தில் ? கோயிலுக்கு உரிய நிலத்தில்
அந்த தோணியின் செய்தி என்ன? கடனுக்காக விலைப்பட்டு போய்விட்டது
ஆர் பட்ட கடனுக்கு? ஆறுமுக மாப்பாண முதலியார் பட்ட கடனுக்கு
அவர் யாரிடத்தில் கடன் பட்டவர்? சோமசெட்டி கடையிலும் மழவராயர் கந்தையா இடத்திலும்
தோணி விலைப்பட்டது ஆறுமுக மாப்பாணர் காலத்திலா அல்லது அவர் இறந்த பின்பா? இறந்த பின்பு
உரிமை தத்துவ வழக்கில் உரிமை தத்துவகாரியிடம் தங்கள் கடனை கேட்டார்களா? ஆம்
 எதற்காக கடன்பட்டார் ? அவர் கோயில் பொருட்களை கொண்டு கற்கள் உடைக்க தொடங்கினர் கோயில் பணம் போதாமை கண்டு அரு .அரு .சோம செட்டி கடையில் கடன் பெற்று கப்பல் செய்வித்தார் அதன் பின் நாங்கள் இருக்கும் வீடு வளவையும் ஈடு வைத்தார்
தோணி விற்ற காசு உங்கள் சொந்த கடனுக்காக கொடுக்கப்பட்ட வில்லையா? இல்லை இவைகள் எல்லாம் கோயிலுக்காக பட்ட கடன். தோணி எனது தமையனார் பெயரில் இருந்தமையால் நடுக்கட்டி விற்று விட்டார்கள்
நீதிபதி : யாழ்ப்பாணத்தில் ஏதும் சைவ மடங்களுக்கு உரிய சாதனங்கள் உண்டா? இல்லை
இலங்கையில் ஆதீனகர்த்தர் என்றதன் கருத்தென்ன?  இலங்கையிலே எனக்கு தெரியாது . யாழ்ப்பாணத்தில் ஒன்றின் சொந்தக்காரன் என்பதே கருத்து
நீதிபதி : மாப்பாணர் கிறிஸ்தவர் என்று சொன்னீரல்லவா? ஆம்
ஆங்கிலேயர் இங்கு வந்த பின் சைவரானார் என்று சொன்னீரல்லவா? ஆம்
அவர் கொழும்புக்கு போய் கோயில் கட்ட உத்தரவு பெற்றார் என்றும் அந்த உத்தரவு பாத்திரம் டாக்குத்தர் கந்தையாவிடம் அகப்பட்டு விட்டதென்றும் குறித்த டாக்குத்தர் அதை குறித்த பிராமணர் வசம் கொடுத்து விட்டார் என்றும் சொன்னீரல்லவா?  அப்படி சொன்னது முழுவதும் சரியா?  குறித்த மாப்பாணர் கொழும்புக்க போனார் என்றும் அங்கே அனுமதி பெற்று கொண்டு வந்து கோயில் கட்டுவித்தாரென்றும்தான் நான் சொன்னேன்
டாக்குத்தர் கந்தையாவிடம் அகப்பட்ட அனுமதி பத்திரம் எது?  இந்த கோயில் இருக்கும் நிலத்தை குறித்த மாப்பாணர் பணம் கொடுத்து வாங்கினார் என்பதை பற்றியே ஆகும்
சுப்பய்யருடைய அனுமதி பத்திரமொன்றை டாக்குத்தர் கந்தையா பிரமணரிடம் கொடுத்தார் என்று சொன்னீரே? அது எது?
நான் அனுமதி பத்திரம் என்று சொல்லவில்லை எல்லா உறுதிகளும் சாதனங்களும் டாக்குத்தர் கந்தையாவிடம் அகப்பட்டு போயின என்றும் . அவர் சிநேகத்தினாலே பிராமணர் வசம்  கொடுத்துவிட்டார் என்றுமே  சொன்னேன்
சுப்பையரிடம் ஒரு அனுமதி பத்திரம் இருந்ததை பற்றி நீர் கேள்விப்பட்டதுண்டா ? இந்த பிராமணர் சொல்ல கேள்விப்பட்டேன் அல்லாமல் அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.
 அப்படி கேள்விப்பட்டது இந்த வழக்கு தொடங்க  முந்தியா? முந்தி
என்ன கேள்விப்பட்டீர்? பிராமணர் தங்களுக்கும் கோயில் உரிமை உண்டென்று சொல்லித்திரிகிறார்கள் என்று எனக்கு வந்து சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன்
கோயில் கட்டுவதற்காகிய உரிய அனுமதி பத்திரம் வைத்திருந்தார்களா? இல்லை
 நீர் கேள்விப்பட்டதென்ன? பிராமணர் தங்களுக்கு கோயில் உரிமை உண்டென்றும் அதனால் வழக்கு தொடரப்போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
 கோயில் கட்டுவதற்காகிய அனுமதி பத்திரம் தங்களிடம் உண்டு என்று அவர்கள் சொல்லவில்லையா? இல்லை அப்படி சொல்ல நான் கேள்விப்பட்டதில்லை.
 மெயிட்லான்ட் தேசாதிபதி சுப்பய்யரை பிரதான பூசகராக நியமித்தாரென்ற சாதனத்தை நீர் நேரில் கண்டதுண்டா? ஆம்
உமது முன்னோர் தாமோதரம்பிள்ளை  என்பவரை பற்றி இலங்கை தேசாதிபதிக்கு ஒரு மநுப்பத்திரம் அனுப்பியதை யிட்டு நீர் அறிவீரா? ஆம்
அந்த காலத்தில் உமது முன்னோருக்கும் பிராமணருக்கு இடையில் பிணக்கு இருந்ததைப்பற்றி அறிவீரா? குறித்த மநுப்பத்திரத்திற்கு எழுதிய மறுமொழியை கொண்டு பிணக்கு இருந்தது என்று அறியலானேன்.
 குறித்த நியமனத்தினால் ஏதும் நன்மை உண்டென்று சொல்லுகிறீரா? கோயிலில் சுப்பையர்தான் பிரதம பூசகரானார் என்று சொல்ல தக்கதா இல்லை
கோயில் இரண்டாம் முறை எப்பொழுது கட்டுவிக்கப்பட்டது என்பது பற்றி உமக்கு தெரியுமா? உறுதியை பார்த்துதான் நான் சொல்லவேண்டும்
 உமது முன்னோரும் சுப்பையரும் ஒரே காலத்தில் இருந்து விவகாரங்கள் நடத்த வேண்டும் என்பதா நியமனம்? அதன் படி நடந்திருந்தால் அப்படிதான் வந்திருக்கும் . ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பதை நான் அறிவேன்
கோயில் இருக்கும் நிலத்திற்கு என்ன பெயர்? குருக்கள் வளவு
 அதன் தெற்கு எல்லை எது? புற்று வீதி
 வடக்கு ? தேர் வீதி
தேர்வீதியை கோயிலுக்கு விட்டவர் யார்? எனக்கு தெரியாது
அம்போடு வளவு என்று சொல்வதெதை? அம்போடு வளவு நாங்கள் குடியிருக்கும் வளவும் அடுத்த காணியும் . அதில் தம்பையா குருக்கள் என்பவர் சிவன் கோயில் கட்டுவித்திருக்கிறார்...   தொடரும்

Comments

Popular posts from this blog

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3